பாலக்காடு, பிப். 25: பாலக்காடு அருகே காரும், ஆம்புலன்சும் மோதி கேரள வன மேம்பாட்டுக்கழக தலைவர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். கேரள வன மேம்பாட்டுக்கழக தலைவரும், தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளருமானவர் ரஷாக் மவுலி. இவர் தனது காரில் டிரைவருடன் பாலக்காட்டிலிருந்து கோழிக்கோட்டிற்கு நேற்று மதியம் புதுப்பரியாரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது எதிராக வந்த ஆம்புலன்ஸ்சும், காரும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ரஷாக் மவுலியும், கார் டிரைவரும் பலத்த காயமடைந்தனர். இவர்களை போலீசார் மற்றும் ஊர்மக்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஹேமாம்பிகா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
