பெரியபுலியூர் கிராமத்தில் இளைஞர்களை தாக்கி பணம், செல்போன் பறிப்பு: 3 பேர் கும்பல் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய புலியூர் கிராமத்தில் தனியார் இரும்பு உருக்காலை இயங்கி வருகிறது. இதில் பல்வேறு வடமாநில இளைஞர்கள் 3 ஷிப்டுகளாக பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பீகாரை சேர்ந்த சஞ்சய் மற்றும் அவரது நண்பரும் இரவு பணி முடிந்து சத்தியவேடு சாலை வழியாக நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 பேர் வடமாநில இளைஞர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறிக்க முயன்றனர். அப்போது, தர மறுத்ததால் ஆத்திரமடைந்த 3 பேரும் வடமாநில இளைஞர்களை தாக்கி பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துகொண்டு தப்பினர்.

இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தனியார் கம்பெனி மேலாளர் நாகலிங்கம், வடமாநில இளைஞர்கள் தாக்கப்பட்டது குறித்து பாதிரிவேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தபோது, அமரம்பேடு பகுதியை சேர்ந்த சின்னா (எ) தினகரன் (25), சிறுவாடா பகுதியை சேர்ந்த கௌதம் (25), தாணிப்பூண்டி பகுதியை சேர்ந்த விஷ்வா (எ) தீபன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: