பாலியல் தொழிலாளிகள் என அழைத்து அருணாச்சல மாணவிகள் மீது இனவெறி தாக்குதல்: டெல்லி போலீசார் வழக்கு பதிவு

 

புதுடெல்லி: டெல்லியில் தங்கிப் படிக்கும் வடகிழக்கு மாநில மாணவிகளுக்கு அண்டை வீட்டார் இனவெறி தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025ம் ஆண்டின் இறுதியில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வடகிழக்கு மாநில மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டெல்லியில் உள்ள மாளவியா நகர் பகுதியில் கடந்த 20ம் தேதியன்று அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த யுபிஎஸ்சி தேர்வுக்காக தயாராகும் மாணவி மற்றும் அவரது அறையில் தங்கியிருந்த இருவர் அண்டை வீட்டாரால் கடுமையான மன உழைச்சலுக்கு ஆளாக்கப்பட்டனர்.

ஏசி இன்ஜின் பொருத்துவதற்காக சுவரில் துளையிட்ட போது அதிலிருந்து வந்த தூசி கீழே இருந்த வீட்டின் பால்கனியில் விழுந்தது தொடர்பாக சிறு பிரச்னை எழுந்தது. இதற்கு அந்த மாணவிகள் மன்னிப்பு கோரிய போதும், அண்டை வீட்டில் வசிக்கும் ஹர்ஷ் சிங் மற்றும் ரூபி ஜெயின் ஆகிய தம்பதியினர் மாணவிகளின் மீது இனவெறி ரீதியாக சாடியுள்ளனர். அந்த மாணவிகளை பாலியல் தொழிலாளர்கள் என்று கூறி இழிவாகப் பேசியதுடன், 500 ரூபாய்க்கு மசாஜ் சென்டர் நடத்துவதாக வக்கிரமான புகார்களை பொதுவெளியில் சுமத்தியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் 196, 79, 351 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

 

Related Stories: