ஆந்திராவிலிருந்து கோவைக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது: 12 கிலோ பறிமுதல்

பொன்னேரி: செங்குன்றம் அருகே மொண்டியம்மன் நகரில் உள்ள சோதனைச்சாவடியில் நேற்றிரவு செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளர் சசிகுமார், எஸ்ஐ விஜயகுமார் மற்றும் காவலர்கள் கார்த்திக், பிரபாகரன் ஆகியோரை கொண்ட குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அங்கு காவலர்கள் கைகாட்டி நிறுத்தியும் 3 பேர் நிற்காமல் வேகமாக ஓடுவதை பார்த்து போலீசார் சந்தேகப்பட்டு விரட்டி பிடித்தனர். பின்னர் 3 பேர் வைத்திருந்த பைகளையும் சோதனை செய்தனர். இதில், அவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திக்கொண்டு வந்திருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, பிடிபட்ட 3 பேரையும் மீஞ்சூரில் உள்ள செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் திருப்பூரை சேர்ந்த சிரஞ்சீவி (21), அஸ்வின் (21) மற்றும் கோவையை சேர்ந்த மதன்குமார் (21) எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள் ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு கஞ்சா கடத்தி செல்ல திட்டமிட்டு இருப்பதும், நடுவே சாலை மார்க்கமாக செல்லும் கடைவீதிகளில் கஞ்சா சில்லறை விற்பனை செய்து வந்திருப்பதும் போலீசார் கண்டறிந்தனர்.

இதுகுறித்து செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரை ஆவடி காவல் ஆணையரக ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: