கொல்கத்தா: மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் என புகழப்படும் முன்னாள் ரயில்வே அமைச்சர் முகுல் ராய் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 71. மேற்கு வங்க அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிறுவன உறுப்பினருமான முகுல் ராய் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு உடல் நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் அவர் கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில் கொல்கத்தா சால்ட் லேக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முகுல் ராய் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் மாரடைப்பால் காலமானதாக அவரது மகன் சுப்ரான்ஷு ராய் தெரிவித்தார்.
மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் என புகழப்படும் முகுல் ராய் தனது 40 ஆண்டுகால அரசியல் பயணத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பாஜ கட்சிகளில் இருந்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மிகவும் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்தவர் முகுல் ராய். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒன்றிய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சராகவும், ரயில்வே அமைச்சராகவும் பணியாற்றினார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
