மகாத்மா காந்தியால் சுதந்திரம் கிடைக்கவில்லை: பாஜ தலைவர் சர்ச்சை பேச்சு:போலீசில் புகார்

 

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த பாஜ தலைவரான பி.சி. ஜார்ஜ் அடிக்கடி வில்லங்கமாக எதையாவது பேசி சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கமாகும். முதலில் கேரளா காங்கிரஸ் (எம்) கட்சியில் இருந்த இவர் பின்னர் அதிலிருந்து விலகி ஜனபக்ஷம் என்ற கட்சியை தொடங்கினார். அதன் பிறகு இவர் தன்னுடைய கட்சியை கலைத்து பாஜவில் சேர்ந்தார். இந்நிலையில் ஒரு ஆன்லைன் செய்தி நிறுவனத்திற்கு பி.சி. ஜார்ஜ் அளித்த பேட்டியில் கூறியது: மகாத்மா காந்தி தான் போராட்டம் நடத்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தார் என்று கூறுவது முட்டாள்தனமானதாகும்.

காந்தி கடவுள் ஒன்றும் கிடையாது. அவரால் நமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. ஆங்கிலேயர்கள் தாங்களாகவே நம் நாட்டை விட்டு சென்றுவிட்டனர் என்பது தான் உண்மையாகும். நம் நாட்டுக்காக காந்தி எதையும் செய்யவில்லை. அவர் எப்போதும் 2 பெண்களின் தோள்களில் கைவைத்து நடந்தவர். காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்தியதாக கூறுகின்றனர். அது ஒன்றும் அவ்வளவு பெரிய போராட்டம் அல்ல. இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் கேரள டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: