பெங்களூரு: கர்நாடகாவில் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ஒன்றியத்தில் இருந்த போது பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டர் முறையே ரூ. 75, ரூ.65 என இருந்தது. பாஜ ஆட்சி அமைந்த பின் பெட்ரோலிய பொருட்கள் விலை விண்ணளவுக்கு உயர்ந்தது. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்த ஒன்றிய அரசு பொருட்களை பதுக்கி வைக்கும் நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது. விவசாய விளைபொருள் விற்பனை மண்டி முடக்கம், கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்துக்கொள்வதற்கான வேளாண் சட்டங்கள் இதுதான் ஒன்றிய அரசின் சாதனைகள்.
எம்பிக்கள் மட்டுமின்றி தன்னிடம் வேறு யாரும் கேள்வி கேட்கக்கூடாது. இதற்காகவே மனதோடு பேசுகிறேன் என வானொலியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜ அரசின் அத்தியாயம் முடியும் காலம் நெருங்கிவிட்டது. அதற்கு முன்னோட்டமாக தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவு இருக்கும்’ என்றார்.
