சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் – கனவுகள் – எதிர்பார்ப்புகளை நாங்கள் நிச்சயம் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடர்ந்து நிறைவேற்றுவோம். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எங்களுக்கு பக்கபலமாக இருங்கள். உங்களுக்கு பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்காக முதல்வர் அறிவித்த உறுதியளிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை அடுத்து, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜாக்டோ-ஜியோ சார்பில் நன்றி அறிவிப்பு மாநாடு சென்னை நந்தனத்தில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாள்கள் பாஸ்கரன், கு.தியாகராஜன் நியமிக்கப்பட்டனர்.
நேற்று மாலை நடந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், அன்பில்மகேஷ்பொய்யாமொழி, பங்கேற்றனர். தொடக்கத்தில் ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் வரவேற்று பேசினார். அதைத் தொடர்ந்து முதல்வருக்கு, நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் கு. தியாகராஜன் ‘‘செங்கோல்’ வழங்கினார். கோரிக்கை சாசனத்தை ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வரிடம் வழங்கினர்.
மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அரசியலில் கொள்கைப் பிடிப்போடு இயங்கும் நாங்கள், மக்கள் நலனுக்காக உருவாக்கும் திட்டங்களை, வெற்றிகரமாக அவர்களிடம் கொண்டுசென்று சேர்க்கும் பெருங்கடமையை செய்பவர்கள், அரசு ஊழியர்களான நீங்கள்தான். அதேபோல், ஆசிரியர்கள் செய்வதை பணி என்று சொல்ல மாட்டேன். நீங்கள் செய்வது தொண்டு.
உங்களால்தான், இந்தியாவில் பள்ளிக்கல்வியில் இரண்டாவது சிறந்த மாநிலமாக, நம்முடைய தமிழ்நாடு இன்றைக்கு விளங்கிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவின் எதிர்காலமான மாணவர்களை உருவாக்கக்கூடிய, உருவாக்கிக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் நலனைப் பாதுகாக்கும் அரசுதான், திமுக அரசு.
நம்முடைய திராவிட மாடல் அரசில், நாட்டிற்கே முன்னோடியான முத்திரைத் திட்டங்களை செயல்படுத்திகொண்டு இருக்கிறோம்.
இந்த திட்டங்களால் திராவிட மாடல் அரசுக்கு நற்பெயரும், செல்வாக்கும் கிடைத்திருக்கிறது என்றால், அந்தப் பெருமையில் பெரும்பங்கு அரசு ஊழியர்களான உங்களுக்குதான் இருக்கிறது. அதற்கான எங்களின் நன்றியை சொல்வதற்கான வாய்ப்பாக, இந்த மாநாட்டை நான் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறேன். இந்த மேடையில் நின்று, அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அரசுப் பணியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், நன்றியை நான் மீண்டும், மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். அரசின் கண்களாக, கரங்களாக செயல்பட்டு வரும் உங்களுக்காக, நம்முடைய திராவிட மாடல் அரசில் செய்யப்பட்டிருக்கும் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டும் என்றால்,
கோவிட் பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை, 2022 முதல், ஒன்றிய அரசுக்கு இணையாக உயர்த்தி வழங்கியதுடன், ஒன்றிய அரசுக்கு இணையாக காலதாமதமின்றி அகவிலைப்படி உயர்வு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.உங்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், அரசுப் யாளர்கள் தங்களின் ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து, பணமாக பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்தியிருக்கிறோம்.
* நாட்டிலேயே வேறெங்கும் இல்லாத புதிய திட்டமாக அரசுப் பணியாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால் ஒரு கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் பத்து இலட்சம் ரூபாயும் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக வழங்கிகொண்டு இருக்கிறோம்! பணியிடை மரணமடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு, ஐந்து இலட்சம் ரூபாய் முதல், பத்து இலட்சம் ரூபாய் வரை திருமணச் செலவிற்கான உதவியாகவும், மேலும், உயர்கல்வி பயில 10 இலட்சம் ரூபாய் வரை நிதியுதவியும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
* அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம், பத்தாயிரம் ரூபாயிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம்.அரசுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி முன்பணம் – தொழிற்கல்விக்கு ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து, ஒரு இலட்சம் ரூபாயாகவும் – கலை மற்றும் அறிவியல் கல்விக்கு 25 ஆயிரம் ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியிருக்கிறோம்.
* அனைத்து மாநிலங்களைக் காட்டிலும், அதிகமாக, தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணம், 40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிகொண்டு இருக்கிறோம்!ஒழுங்கு நடவடிக்கைகளால் பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளன்று தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படும் சூழ்நிலையை அகற்றி, அரசுப் பணியாளர்களை ஓய்வுபெற அனுமதித்து ஆணையிட்டிருக்கிறோம்.
ஓய்வூதியப் பணிக்கொடையை ரூ.20 லட்சம் ரூபாயிலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்குகிறோம். ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு உதவி ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மேலும், அவர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகையை ரூ.500லிருந்து ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறோம்! பெண் அரசு அலுவலர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுப்பை ஒன்பது மாதங்களிலிருந்து, 12 மாதங்களாக உயர்த்தியிருக்கிறோம்.
பெண் அரசு ஊழியர்கள் தகுதிகாண் பருவத்தில் மகப்பேறு விடுப்பில் செல்ல நேர்ந்தால், அந்தக் காலத்தையும் தகுதிகாண் பருவமாக கருத வேண்டும் என்று ஆணை வெளியிட்டிருக்கிறோம். சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களின் சிறப்பு ஓய்வூதியத்தை உயர்த்தி இருக்கிறோம். குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வனக்களப் பணியாளர்களின் பணி நிறைவின் போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை, ஒரு இலட்சம் ரூபாயிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குகிறோம்!
* அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிறைவின்போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ஐம்பதாயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பங்களுக்கு, குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து 200 ரூபாயும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வனக்களப் பணியாளர்கள் உள்ளிட்ட, இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரத்து நூறு ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
* சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் இந்தப் பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்கு செலவினங்களுக்கு ரூ.20 ஆயிரமாக வழங்கப்பட்டு வருகிறது.
* நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் சேர்வதற்காக பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது. இது எல்லாவற்றிற்கும் மகுடம் சூட்டுவது போன்று, உங்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய, புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை” செயல்படுத்தியிருக்கிறோம்.
இந்த அறிவிப்பு வெளியான அன்று கோட்டையில் நாம் இனிப்புகள் பரிமாறிக் கொண்ட, அந்த பாசக் காட்சி, தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவரை பார்க்காத காட்சி. இவ்வளவு பெரிய திட்டத்தை, எப்படிப்பட்ட சூழலில் நிறைவேற்றியிருக்கிறோம் என்று மற்ற எல்லோரையும்விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொரு ஆண்டும், நமக்கான வரிப்பகிர்வை ஒன்றிய அரசு குறைத்துகொண்டே இருக்கிறது. ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதியை கூட குறைத்துகொண்டு இருக்கிறார்கள். அந்த நிதியையும் முறையாக வழங்குவதில்லை. ஜி.எஸ்.டி மாற்றங்களால் மாநிலத்தின் வரி வருவாய் குறைந்துகொண்டே வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், எல்லா துறைகளிலும் நலத்திட்டங்களை செய்தாக வேண்டும்.
வருமானம் குறைவு – செலவு அதிகம், இதுதான் நம்முடைய நிலை. திட்டமிட்டு செயற்கையாக இந்த நிதி நெருக்கடியை உருவாக்குகிறார்கள். அரசியல் ரீதியாக மட்டுமல்ல, நிர்வாகரீதியாகவும் அவர்களை வெற்றிகரமாக சமாளித்துதான், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றிகொண்டு இருக்கிறோம். பழைய ஓய்வூதியம் குறித்த கோரிக்கையை 22 ஆண்டுகளாக நீங்கள் வைத்துகொண்டு இருக்கிறீர்கள். யார் ஆட்சியில் இந்த உரிமை பறிக்கப்பட்டது? அ.தி.மு.க. ஆட்சியில். அப்போது, நீங்கள் நடத்திய போராட்டங்கள் சாதாரணமானதா? வியர்வைத்துளி சிந்தி உழைத்த உங்களுக்கு இரத்தக்கண்ணீரை வர வைத்ததுதான், கருணையில்லா அ.தி.மு.க. ஆட்சி. ஆனால், இது அனைவரையும் அரவணைக்கும் கருணையே வடிவான தி.மு.க. ஆட்சி.
அதனால்தான், உங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அரசு அலுவலர்களுக்கு முறையான ஓய்வூதியத்தை வழங்குவதற்கான, தகுந்த பரிந்துரைகளை வழங்க, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி அவர்கள் தலைமையில், ஒரு குழுவை அமைத்தோம். அவர்களும் அறிக்கை அளித்தார்கள். தொடர்ந்து, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் உங்களிடம் உட்கார்ந்து தொடர்ந்து பேசினார்கள்.
உங்களின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகள், தமிழ்நாட்டின் நிதிநிலை, எதிர்காலத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்தவித தடைகளும் இல்லாமல் முறையாக ஊதியமும், ஓய்வூதியமும் கிடைக்கச் செய்யவேண்டிய பொறுப்பு என்று எல்லாவற்றையும் பரீசிலனை செய்துதான், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தோம். இந்த ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்,
* மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில், 50 விழுக்காடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இதற்கு, பணியாளர்களின் 10 விழுக்காடு பங்களிப்புடன், ஓய்வூதிய நிதியத்திற்கு தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்! 50 விழுக்காடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு, ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை, அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான, அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், அவர் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு, அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 விழுக்காடு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்!
* அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கு ஏற்ப 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல், பணிக்கொடை வழங்கப்படும். புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல், பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர், இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியமின்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும். இனி, இதை கருணை ஓய்வூதியம் என்று சொல்லாமல், உங்களின் உழைப்பிற்கான உரிமைத்தொகை என்றே வழங்குவோம்.
இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு தமிழ்நாடு அரசு கூடுதலாக ரூ.13 ஆயிரம் கோடி அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும், சுமார் ரூ.11 ஆயிரம் கோடியை அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும். இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். இப்போது தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காக்க வேண்டும் என்று, இப்போது சொன்ன அத்தனை செலவினங்களையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று நான் உறுதி அளிக்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி, ஆட்சியில் இருந்தபோது, அரசு ஊழியர்களை எப்படி எல்லாம் கொச்சைப்படுத்தி பேசினார்? எப்படி எல்லாம் விளம்பரம் கொடுத்தார்கள் என்பதையெல்லாம் நான் அதிகம் நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக கூட்டணி அமைத்திருப்பவர்கள், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஆதரவாக இருப்பார்களா? சிந்தித்துப் பாருங்கள். ஆனால், நாங்கள் அப்படி இல்லை.
உங்களின் கோரிக்கைகள் – கனவுகள் – எதிர்பார்ப்புகளை நாங்கள் நிச்சயம் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடர்ந்து நிறைவேற்றுவோம்! அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எங்களுக்கு பக்கபலமாக இருங்கள். உங்களுக்கு பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம். வெல்வோம் ஒன்றாக! இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
