ஊட்டி- மஞ்சூர் சாலையில் பூத்துக்குலுங்கும் ‘எவர்லாஸ்ட் மலர்கள்’ சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்து

 

ஊட்டி: ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் பாலகொலா, காத்தாடிமட்டம் மற்றும் காந்திபேட்டை போன்ற பகுதிளில் பூத்துள்ள ‘எவர்லாஸ்ட் மலர்கள்’ சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பூங்காக்களில் மட்டுமின்றி, சாலையோரங்கள் மற்றும் வனப்பகுதிகளிலும் அவ்வப்போது சில மலர்கள் பூத்துக் காணப்படும். இது சுற்றுலா பயணிகளை மட்டுமின்றி, உள்ளூர் மக்களையும் கவர்ந்து வருகிறது. இதில் குறிப்பாக, குறிஞ்சி மலர்கள், ஜெகரண்டா, சேவல் கொண்டை மலர்கள், டேலியா, பிளேம் ஆப்தி பாரஸ்ட் போன்ற மலர்கள் அவ்வப்போது சீசனுக்கு ஏற்றார் போல் பூத்து காணப்படும்.

பெரும்பாலும், இந்த மலர்கள் சாலையோரங்களில் பூப்பதால், அழகாக காட்சியளிக்கும். இதனை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துசெல்வது வழக்கம். இந்த மலர்களை போன்றே அவ்வப்போது ஊட்டியில் பல்வேறு பகுதிகளிலும் ேதயிலை தோட்டங்கள், சாலையோரங்களில் மஞ்சள் நிறத்தில் எவர் லாஸ்ட் மலர்கள் பூப்பது வழக்கம். இந்த மலர்கள் பல நாட்கள் வாடாமல் இருக்கும். இதனால், இதற்கு காகித பூக்கள் என்ற பெயரும் உண்டு. இந்த எவர்லாஸ்ட் மலர்களை பறித்து வந்து பெரும்பாலான பெண்கள் சுற்றுலா தலங்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையோரத்தில் கைகாட்டி, காந்திப்பேட்டை, 6வது மைல், பாலகொலா, காத்தாடிமட்டம் ஆகிய பகுதிகளில் இந்த மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. அதேபோல் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மலர்கள் தற்போது பூத்து காணப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசிப்பதுடன், அதனை புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

Related Stories: