ஒரத்தநாடு: தஞ்சாவூர் அருகே தவெக விழாவில் நடனமாடிய பெண் ஹெச்எம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த திருவோணம் ஒன்றியம் சங்கரநாதர் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி(58). வெள்ளத்தேவன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி பொறுப்பு தலைமையாசிரியையாகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தவெக சார்பில் ஒரத்தநாட்டில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட மகளிர் தின விழாவில் தலைமையாசிரியை கிருஷ்ணவேணி பங்கேற்று விழா மேடையில் ஒரு சினிமா பாடலுக்கு நடனமாடினார். அவர் நடனமாடும் வீடியோ வைரலானது.
அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக இருப்பவர், ஒரு அரசியல் கட்சி நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடியது குறித்து கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு புகார் சென்றது. இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்குமாறு பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதியழகனை கல்வித்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்பேரில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் விசாரணை மேற்கொண்டதில், மகளிர் தின நிகழ்ச்சியில் தலைமையாசிரியை கிருஷ்ணவேணி பங்கேற்று விழா மேடையில் நடனமாடியது உண்மை என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தலைமையாசிரியை கிருஷ்ணவேணியை சஸ்பெண்ட் செய்து பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதியழகன் உத்தரவிட்டார்.
