சென்னை: 77வது குடியரசு தினத்தை ஒட்டி மெச்சதக்க நுண்ணறிவு, மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப்பிரிவில் 43 காவல் அதிகாரிகள், தனிப்பிரிவு உதவியாளர் என 44 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு: மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்க பிரிவில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும்,
பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் காவல்துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு 2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பணிப் பதக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2026-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, காவல் துறையில் மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பிரிவில் பணியாற்றிய 43 காவல்துறை அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 1 தனிப் பிரிவு உதவியாளர், நுண்ணறிவுப் பிரிவு ஆகியோருக்கு “தமிழக முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்” வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா பத்து கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், முதலமைச்சர் பிறிதொரு விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
