புதுடெல்லி: டெல்லி கன்டோன்மென்டில் தேசிய மாணவர் படையின்(என்சிசி) குடியரசு தின முகாம் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “உலகம் நிச்சயமற்ற சூழலில் சென்று கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், நமது இளைஞர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் மிக வலிமையாக இருக்க வேண்டும்.
எதிர்கொள்ளும் எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், நம் வீரர்கள் தைரியத்துடனும், நிதானத்துடனும் செயல்பட்டனர். நம்மை காயப்படுத்தியவர்களை மட்டுமே நாம் குறி வைத்து அழித்தோம், வேறு யாரையும் அல்ல.
அதற்கு நம் வீரர்கள் உடல், மன, உணர்வுரீதியாக வலிமையாக இருந்ததே காரணம். 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் பிரதமர் மோடி அரசின் தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கு இளைஞர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். இளைஞர்கடமிருந்து எதிர்பார்ப்புகள்அதிகரித்துள்ள ஒரு காலத்துக்குள் நாம் நுழைந்துள்ளோம்.
இளைஞர்கள் தேசத்தின் விலை மதிப்பற்ற சொத்துகள், அவர்கள் நாட்டை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் பொறுப்பை சுமந்து கொண்டுள்ளனர். இளைஞர்களை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த இயக்கமாக என்சிசி உள்ளது. என்சிசி மாணவர்களை மனதளவில் வலிமையாக்கி, தேசபக்தியையும் வளர்க்கிறது” என்றார்.
