கரூர், ஜன. 27: கரூர் திருக்காம்புலியூர் அருகே இரண்டு சக்கர வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகே அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இரண்டு சக்கர வாகன பேரணி நடத்தும் வகையில் ஏராளமானோர் நேற்று ஒன்று கூடினர். சம்பவ இடத்துக்கு வந்த டவுன் போலீசார், பேரணிக்கு அனுமதியில்லை என தெரிவித்தனர். இதனால், இருதரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைப்புக்குழுவினர் கரூர் ஈரோடு சாலை வடிவேல் நகர் அருகே திடீரென அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர், ஒரு மணி நேரத்துக்கு பிறகு, அனைவரும் அந்த பகுதியில் இருந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி பேரணியாக நடந்து சென்றனர்.