துருக்கியில் விமான விபத்து லிபியா ராணுவ தளபதி உட்பட 8 பேர் பலி

அங்காரா: லிபியாவில் அரசுக்கு ஆதரவாகத் துருக்கி ராணுவம் செயல்பட்டு வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி தொடர்பான பேச்சுவார்த்தைக்காக லிபியா ராணுவ உயர் அதிகாரிகள் குழு துருக்கி சென்றிருந்தது. அங்காராவில் இப்பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு தனி விமானம் மூலம் அவர்கள் லிபியா தலைநகர் திரிபோலிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். விமானம் புறப்பட்ட 40 நிமிடங்களில் திடீர் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்க முயன்றபோது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

பின்னர் சிறிது நேரத்தில் கெசிக்காவக் கிராமம் அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் லிபியா ராணுவ தலைமைத் தளபதி முகமது அலி அகமது அல்-ஹட்டாத், தரைப்படை தளபதி அல்-பிதூரி கரிபில் உட்பட 5 அதிகாரிகளும், 3 விமான ஊழியர்களும் என மொத்தம் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். இதுகுறித்து லிபியா பிரதமர் அப்துல் ஹமீத் தபேபா வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டிற்காக உழைத்த ராணுவத் தலைவர்களை இழந்து தவிக்கிறோம், உயிரிழந்த வீரர்களுக்குத் நாடு அஞ்சலி செலுத்துகிறது . 3 நாட்கள் தேசியத் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: