குளித்தலை, ஜன. 19: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் பத்து மாத காலமாக பள்ளி, கல்லூரிகள் மாணவ, மாணவிகளின் நலன் கருதி மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் கட்டாய நிலையில் இருப்பதால் மீண்டும் பள்ளியை திறக்க கல்வித்துறை சார்பில் பெற்றோர்கள் தரப்பில் ஆலோசனைகளை பெறப்பட்டு இறுதியாக 19 ம் தேதியிலிருந்து 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவில் கொரோனா கால விதிமுறைகளை பள்ளி மாணவர்கள் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும். பள்ளி வகுப்பறைகளை கிருமி நாசினிகளை தெளித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கழிப்பறைகளை தினம் தோறும் சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நுழைவுவாயிலில் கிருமி நாசினி தெளித்து அவர்களுக்கு முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என வலியுறுத்த வேண்டும். தினந்தோறும் அவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட சத்து மாத்திரைகளை வழங்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகளுடன் அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர் .