திருவள்ளூர், டிச.8: திருவள்ளூரில் தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் சந்துரு (26). இவர் மணவாளநகர், கருணாநிதி தெருவில் தங்கி தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இவர் தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தூங்கிக் கொண்டிருப்பதாக வீட்டின் உரிமையாளர் சக்திவேல், மணவாளநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் சக்திவேல் மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தூக்கில் பிணமாக தூங்கிக் கொண்டிருந்த தனியார் தொழிற்சாலை ஊழியர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டனரா? என்றும், அவரது இறப்பிற்கு காரணம் என்ன என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
