நாகர்கோவில், ஜன.5: .நாகர்கோவில் அருகே பறக்கை, காடேற்றி பகுதியை சேர்ந்தவர் பொன்னையா மகன் சுதாகரன் (36). இவர் நேற்று காலை தனது 2 மகள்களுடன் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அலுவலக வாசல் அருகே சென்றவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அப்பகுதியில் நின்றவர்கள் காப்பாற்றினர். அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலையும் பறித்தனர். பின்னர் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தனது மனைவி தன்னையும், மகள்களையும் விட்டு பிரிந்து வாலிபர் ஒருவருடன் சென்று விட்டதாகவும், அதனால் நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்ததாகவும் கூறினார். அவர் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது மனைவி சுபா மாலினியுடன்(31) காடேற்றியில் வசித்து வந்தேன். மனைவி சுபா மாலினி கடந்த 23.11.2020 காலை 10 மணி அளவில் திட்டுவிளை அருகே வாட்ஸ்புரத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு வங்கியில் பணம் எடுத்து வருவதாக 2 பிள்ளைகளையும் அழைத்து சென்றார். பின்னர் பிற்பகல் 1.30 மணியளவில் எனது மாமியார் செல்போனில் இருந்து தொடர்பு கொண்டு என்னிடம் பேசிய எனது மனைவி, வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை எடுத்து விட்டேன். பிள்ளைகளை எனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன் என்று கூறினார். ஆனால் 4 மணி நேரம் ஆகியும் எனது மனைவி வீட்டிற்கு வரவில்லை.