ஆத்தூர் அருகே தறிகெட்டு ஓடிய கார் மளிகை கடைக்குள் புகுந்தது

ஆறுமுகநேரி, மே 26: ஆத்தூர் அருகே தறிகெட்டு ஓடிய கார், பைக் மீது மோதியதோடு மளிகை கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் பைக்கில் வந்த 3 பேர் படுகாயமடைந்தனர். அத்துடன் மளிகையும் கடை சேதமடைந்தது. தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் நூறு வீடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன்(49). மீன்பிடி தொழிலாளியான இவரும் இவரது 4வது மகனான அமலன் என்பவரும் புன்னக்காயலில் இருந்து ஆத்தூருக்கு பைக்கில் வந்துக்கொண்டிருந்தனர். வடக்கு ஆத்தூர் தனியார் மருத்துவமனை அருகே வரும்போது எதிரே அரியலூர் மாவட்டம் மேலப்பழுர் சுப்பிரமணியன் மகன் நீலவண்ணன்(40). என்பவர் அதிவேகமாக ஓட்டிவந்த கார், தறிகெட்டு ஓடியதோடு இவர்களது பைக் மீது மோதியது. அத்துடன் இவர்களுக்கு பின்னால் பைக்கில் வந்த நரசன்விளை கண்ணகி தெருவை சேர்ந்த முருகேசன் மகன் மெய்க்கும்பெருமாள்(42) என்பவர் மீதும் மோதியது. இதைத்தொடர்ந்து சாலையின் வலதுபுறம் உள்ள மளிகை கடைக்குள் புகுந்த கார், கடைவாசலில் மோதி நின்றது. இந்த விபத்தில் மளிகை கடையின் உரிமையாளர் மற்றும் அங்கு நின்ற வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ஆனால், இந்த விபத்தில் ஜான்சனுக்கு வலது தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் அமலன், மெய்க்கும்பெருமாள் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மீட்கப்பட்ட அனைவரும் ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜான்சனுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆத்தூர் அருகே தறிகெட்டு ஓடிய கார் மளிகை கடைக்குள் புகுந்தது appeared first on Dinakaran.

Related Stories: