கலெக்டராக தேர்வான தூத்துக்குடி வணிகவரி அலுவலருக்கு சண்முகையா எம்எல்ஏ பாராட்டு

ஓட்டப்பிடாரம், மே 26: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று துணை கலெக்டராக தேர்வான தூத்துக்குடி வணிகவரித்துறை அலுவலருக்கு சண்முகையா எம்எல்ஏ, ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மற்றும் யூனியனுக்கு உட்பட்ட ஒட்டுடன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற புள்ளியல் ஆய்வாளர் பரமசிவத்தின் மகன் கோகுல் சிங் (27). கடந்த 2020ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்ற இவர், தூத்துக்குடி உதவி வணிக வரித்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். பின்னர் கடந்த 2024ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை கலெக்டர் பணியிடத்திற்கு தேர்வானார்.

இதையடுத்து அவரது சொந்த ஊரான ஒட்டுடன்பட்டியில் நேற்று அவருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் ஒட்டுடன்பட்டி அபிவிருத்தி நல சங்கத்தின் சார்பில் பாராட்டு விழாவானது அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற சண்முகையா எம்எல்ஏ, ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர், துணை கலெக்டராக தேர்வாகி பணியாற்ற உள்ள கோகுல் சிங்கை பாராட்டியதுடன் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினர். விழாவில் கிராம அபிவிருத்தி நலச்சங்கத் தலைவர் அன்ன லட்சுமணமூர்த்தி, செயலாளர் ரங்கசாமி, பொருளாளர் செல்லத்துரை, திருவனந்தபுரம் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக முதன்மை விஞ்ஞானி லட்சுமணகாந்தன் பாரதி, பஞ். தலைவர்கள் கொடியங்குளம் அருண்குமார், அக்கநாயக்கன்பட்டி அய்யாத்துரை மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த அரசுத்துறை அலுவலர்கள், அபிவிருத்தி நல சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post கலெக்டராக தேர்வான தூத்துக்குடி வணிகவரி அலுவலருக்கு சண்முகையா எம்எல்ஏ பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: