அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பா? நீதிபதி நேரில் ஆய்வு மதுரை நீதிமன்றத்தில் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு

கரூர், டிச. 4: கரூர் அமராவதி ஆற்றில் கழிவுகள் கலப்பது குறித்தும், வாய்க்கால் வெட்டப்பட்டது குறித்தும் சார்பு நீதிபதி நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

கரூர் நகரின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றில் சாயக்கழிவு மற்றும் குடியிருப்போர்களின் கழிவுகள் உட்பட பல்வேறு கழிவுகள் நேரிடையாக கலப்பது குறித்தும், அமராவதி ஆற்றில் எந்தவித அனுமதியும் இன்றி 15 அடி அகலம், 6 அடி ஆழத்தில் வாய்க்கால் வெட்டப்பட்டது குறித்தும் ஊடகங்களின் வந்த செய்தியின் அடிப்படையில், மதுரை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து, நேற்று காலை சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளருமான மோகன்ராம், சின்னாண்டாங்கோயில், எம்ஜிஆர் நகர், பசுபதிலேஅவுட் போன்ற பகுதிகளின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றுப்பகுதிக்கு சென்று, ஆற்றில் கழிவுகள் கலக்கப்படுவது குறித்தும், வாய்க்கால் வெட்டப்பட்டது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அமராவதி ஆற்று பொதுப்பணித்துறை அதிகாரி சரவணன், சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.நான்கு இடங்களில் ஆய்வு மேற்கொண்டது குறித்து நாளை (இன்று) மதுரை நீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் கூறிச் சென்றனர்.

Related Stories: