நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

கரூர், மார்ச் 20: கொரோனா விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க ஏமூர் நடுப்பாளையத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாசித்து வருகின்றனர். உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய கொரனோ வைரஸ் பீதி காரணமாக தமிழகம் முழுதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31ம்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து மாணவ, மாணவிகளும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டம் ஏமூர் நடுப்பாளையத்தில் நூலக கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் பூட்டிய நிலையில்தான் இருந்தது. தற்போது சில மாதங்களாக இந்த கட்டிடம் திறக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஏமூர் நடுப்பாளையம் பகுதி மாணவ, மாணவிகள் இந்த பகுதியில் உள்ள நூலகத்துக்கு சென்று இருக்கும் புத்தகங்களை ஆர்வத்துடன் வாசித்து வருகின்றனர்.

வாசிக்கும் பழக்கத்தை சிறு வயதில் இருந்தே கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் நூலகத்துறை பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்பட்டு வருகிறது. இதற்கேற்ப இந்த மாணவர்களின் செயல்பாடுகள் உள்ளதால், மாவட்டத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இதே போன்ற நிலை உருவாக தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: