கரூர், பிப். 25: கரூர் ஜீவா நகரில் பாதுகாப்பற்ற சூழலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பகுதியை சுற்றிலும் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகராட்சிக்குபட்ட அசோக் நகர், மில்கேட், என்ஜிஓ நகர், பாலாஜி நகர், கணபதிபாளையம் உட்பட பல்வேறு நகர்ப்பகுதியினர் பயன்படுத்தும் வகையில் ஜீவா நகரில் பிரதான குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆனால், மேல்நிலை தொட்டி வளாகம் அமைக்கப்பட்டுள்ள பகுதி திறந்த நிலையில் இருப்பதால், இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத பலர், தொட்டியின் மேற்பகுதிக்கு சென்று சரக்கு அடிப்பது போன்ற பல்வேறு ரகளைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் காரணமாக, இந்த பகுதியை சுற்றிலும் குடியிருந்து வரும் பொதுமக்கள் நிம்மதியற்ற சூழலில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த மேல்நிலை தொட்டி வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என பலமுறை கோரிக்கையும் வைத்துள்ளனர்.