கரூர்- சென்னை வழித்தடத்தில் காலை நேரத்தில் ரயில் இயக்க நடவடிக்கை

கரூர், ஜன. 29: கரூர் ரயில்வே நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸிடம், கரூர் மாவட்ட ரயில்வே பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் நகர பயணிகளின் நீண்ட கால கோரிக்கையான காலை நேரத்தில் சென்னை கரூர் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவுளிகள் ஏற்றுமதி நகரமான, வியாபார தொழில் நகரமான கரூரைச் சுற்றி பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, பரமத்தி வேலூர், கொமுடி, குளித்தலை, வெள்ளக்கோயில், காங்கேயம் போன்ற சிறு நகரில் வசிக்கும் மக்களும் பயன்படும் வகையில் இந்த திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டும்.

கரூர் அருகில் அமராவதி, காவிரி போன்ற ஆறுகள் ஓடுவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. எனவே ரயில்களுக்கு தாராளமாக தண்ணீர் நிரப்ப வசதியாக கரூர் ரயில்வே நிலையத்தில் ரயில் பெட்டிக்கு தண்ணீர் நிரப்பும் பைப் லைன் போட்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அதையும் நடைமுறைப்படுத்த வேண்டும். மங்களுர் சென்னை ரயில் கரூருக்கு தற்போது இரவு 7.58 மணிக்கு வந்து மறுநாள் காலை 3.40 மணிக்கு சென்னை சென்றடைகிறது. இந்த நேரத்தை மாற்றி கரூரில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.15 மணியளவில் சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். இதனால், சேலம் கோட்ட ரயில்வே துறைக்கு லாபம் கிடைக்கவும் வழிவகை ஏற்படும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: