கரூர்,டிச.11: கொடிநாள் நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உபசரித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கலெக்டர் அன்பழகன் நலத்திட்ட உதவிகளை வழங்கி குறைகளை கேட்டறிந்தார். ரூ1.16லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கூறுகையில், படைவீரர் நல நிதிக்கு அனைத்து தரப்புமக்களும் தாராளமாக நிதியளிக்க முன்வரவேண்டும். எனது தந்தையும் தாய்நாட்டிற்காக பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்தான். கலெக்டர் என்பதைவிட ராணுவவீரரின் மகன் என்பதையே பெருமையாக கருதுகிறேன். பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ளவர்கள் அதிகமாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். முன்னாள் ராணுவத்தினர் வேலைவாய்ப்புக்காக துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் கரூர் மாவட்டத்தில் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.