தோகைமலை, அக்.12: தோகைமலையில் அட்மா திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கரூர் மாவட்டம் வேளாண்மைத் துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர்கள் குழு உறுப்பினர்களுக்கு அட்மா திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தோகைமலையில் உள்ள கருப்பசாமி கோவில் அருகே நடந்த பயிற்சிக்கு வேளாண்மை துணை இயக்குநர் உமாராணி தலைமை வகித்து பேசுகையில், கூட்டு பண்ணையத்தில் குழுவாக உள்ள விவசாயிகளுக்கு விவசாய தொழில்நுட்ப இயந்திரங்கள் பெறுவதற்கு வங்கியின் மூலம் 100 சதவீதம் மானியத்தில் ரூ.5 லட்சம் வரை நிதி அளிக்கப்படுகிறது. மேலும் மானாவாரி திட்டத்தில் தடுப்பணைகள் அமைப்பதற்கும், உழவு மானியம் வழங்கவும் தோகைமலை ஊராட்சியை தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இதில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். மேலும் கூட்டுப்பண்ணையம், நுண்ணீர் பாசனம், உழவன் செவிலி போன்ற தலைப்புகளிலும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் வேளாண்மை அலுவலர்கள் அர்சுணன், ஜெயபாரதி, ஷீலாரோஷ், உதவிபொறியாளர் ராமு ஆகியோர் பயிற்சி அளித்தனர்.