கரூர், அக்.12: கரூர் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர். 2018-19ம் கல்வியாண்டிற்கான குடியரசு தின தடகளப் போட்டிகரூர் மாவட்ட அளவில் ராணி மெய்யம்மை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.இதில், கரூர், பசுபதிபாளையம், சின்னதாராபுரம் மற்றும் குளித்தலை ஆகிய குறு வட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், கரூர் வெற்றி விநாயகா பள்ளி மாணவிகள் 14, 17 மற்றும் 19வயதுக்குட்பட்டோர்களுக்கான பிரிவில் 19 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் இப்பள்ளி மாணவிகள் 99 புள்ளிகளை பெற்று தொடர்ந்து 2 ஆண்டுகளாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், மாணவர் பிரிவில் மாவட்ட அளவில் தொடர்ந்து இரண்டாமிடத்தையும் பெற்றனர். இதில், 17 வயது மாணவிகள் பிரிவில் 11ம் வகுப்பு மாணவி கரினா நல்லி 20 புள்ளிகளை பெற்று மாவட்ட அளவில் தொடர்ந்து தனிநபர் சாம்பியன் பட்டத்தையும், 19 வயது மாணவிகள் பிரிவில் மாணவி அனுசியா 20 புள்ளிகளை பெற்று மாவட்ட அளவில் தனிநபர் சாம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ளனர்.