மலேசிய பெண் எம்எல்ஏவுக்கு முகநூலில் ஆபாச எஸ்எம்எஸ்: பாஜ நபர் மீது புதுச்சேரி கவர்னரிடம் புகார்

புதுச்சேரி: மலேசியாவின் பகாங் மாநிலம், சபாய் எம்எல்ஏவாக  இருப்பவர் தமிழச்சி காமாட்சி துரைராஜூ. மலேசியவாழ் தமிழரான இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிவேல் பிரகாஷ் என்ற பெயரில் மர்மநபர் ஒருவர் முகநூல் மூலம் அறிமுகமாகி உள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து எம்எல்ஏவும் பதிவிட்டுள்ளார். பதிலுக்கு அந்த மர்ம நபர் வரவேற்பு பதிவு ஒன்றை  போட்டுள்ளார். அதன்பிறகு முகநூல் பக்கத்தை தமிழச்சி காமாட்சி துரைராஜூ பார்க்காமல் இருந்துள்ளார். தொடர்ந்து அந்த மர்மநபர் முகநூல் பக்கத்தில் அவருக்கு ஆபாச எஸ்எம்எஸ் மற்றும் ஆபாச பதிவுகளை பதிவிட்டு வந்துள்ளார். மேலும் முகநூல் மெசெஞ்சர் மூலம் கால் செய்து தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். இதனை கவனித்த எம்எல்ஏவின் உதவியாளர், இதுதொடர்பாக கட்சி  நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கட்சி நிர்வாகிகள்,  வெற்றிவேல் பிரகாஷ் என்ற பெயரில் ஆபாச பதிவுகளை பதிவிட்ட நபருக்கு தொடர்பு கொண்டபோது, அவர் முகநூல் பக்கத்தை பிளாக் செய்திருக்கிறார். மேலும் தமிழச்சி காமாட்சி துரைராஜூவின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பகிர்வேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, மர்ம நபர் பதிவிட்ட முகநூல் பதிவுகளுடன், ஆடியோ மூலம் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த ஆடியோவில், ‘‘அந்த நபர் அனுப்பும் பதிவுகளை பார்க்கும்போது அத்துமீறலில்  ஈடுபடுவது தெரிகிறது. இதுதொடர்பாக தமிழகத்தில் உள்ள நண்பர்கள்  சிலரிடம் பேசியபோது உங்களுடைய தொடர்பு எண்களை கொடுத்தனர்.  காரணம் அந்த மர்மநபர் புதுச்சேரி சேர்ந்தவர். அவரது பதிவுகளை  பார்க்கும்போது பாஜகவை சேர்ந்தவர் போன்று தெரிகிறது. தயவுசெய்து,  இதுதொடர்பாக தக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன். மலேசியா  நாட்டில் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள தமிழ்பெண்ணான எனக்கே இதுபோன்ற நிலை என்றால், அவரது ஊரில் என்ன செய்வார் என்பதை யோசித்து பார்க்கவே  முடியவில்லை. இதனை வளரவிடக்கூடாது. எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது தக்க  நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்’’ என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரிக்க காவல்துறை தலைமைக்கு கவர்னர் உத்தரவிட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post மலேசிய பெண் எம்எல்ஏவுக்கு முகநூலில் ஆபாச எஸ்எம்எஸ்: பாஜ நபர் மீது புதுச்சேரி கவர்னரிடம் புகார் appeared first on Dinakaran.

Related Stories: