தஞ்சாவூர், ஏப்.30: பாபநாசம் அரசு மருத்துவமனையில் செவிலியரிடம் அரசு பணியை செய்ய விடாமல் தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். பாபநாசம் அருகே மாளிகைத்திடல் சோத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது (27) இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஒருவரை பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவரை குடிபோதையில் தகாத வார்த்தைகளால் திட்டி அரசு பணியை செய்ய விடாமல் தகராறில் ஈடுபட்டு உடனே சிகிச்சை அளிக்க வேண்டுமென கூறியுள்ளார்.
இது குறித்து அந்த பெண் செவிலியர் கொடுத்த புகாரின் பேரில், பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, ஏட்டுகள் கார்த்திகேயன், பாஸ்கரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாக வாலிபர் மணிகண்டனை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, மணிகண்டனை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ஜெய்கணேஷ் உத்தரவிட்டார்.
