திருக்காட்டுப்பள்ளி, ஏப்.30: அக்னீஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற சிவஸ்தலமாகும். இக்கோயிலில் சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புஷ்ப அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு அபிஷேக, அலங்கார,ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வசந்த மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் (உற்சவர்) புஷ்ப அலங்காரம் செய்து கோயில் வளாகத்திற்குள் புறப்பாடு நடைபெற்றது.நிறைவாக மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
