மன்னார்குடி,ஏப்.23: மன்னார்குடி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 17வது சட்டமன்ற தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 1,13,605 ஆண் வாக்காளர்கள், 1,20,821 பெண் வாக்காளர்கள், 4 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,34,430 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 306 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,468 பேர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், மன்னார்குடி வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் விவி பேட் இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று நடந்தது. இப்பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனச்சந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
