கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் பணியாளர்களுக்கு ஊதியஉயர்வு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுகுறித்து வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: செயலற்ற தொழிலாளர் விரோத அதிமுக அரசு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட ஊதிய உயர்வு வழங்காமல் மறுத்து வந்தது.

சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் கோரிக்கையை கருணையுடன் பரிசீலனை செய்து, தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு வழங்கும் நோக்குடன், குழு ஒன்று அமைத்து, குழுவின் அறிக்கையை பெற்று அதன் அடிப்படையில் தற்போது ஊதிய உயர்வு வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஊதிய உயர்வின் மூலம் தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் 35% அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளதுடன், 30.9.2022 வரையிலான காலத்திற்கு நல்லெண்ண தொகையாக நிரந்தர தொழிலாளி ஒருவருக்கு ரூ.40,000 முதல் ரூ.50,000 மற்றும் பருவகால தொழிலாளிக்கு ரூ.32,000 முதல் ரூ.40,000 வரையில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், 1.10.2022 முதல் தற்போது வரை உள்ள காலத்திற்கு நிலுவை தொகை ரொக்கமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்துவரும் சூழ்நிலையில் அனைத்து தொழிலாளர்களும், பணியாளர்களும் தற்போது முதல்வர் வழங்கியுள்ள ஊதிய உயர்வை ஏற்று, அனைத்து கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை மேலும் லாபகரமாக இயக்கிட தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் பணியாளர்களுக்கு ஊதியஉயர்வு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: