10 ஆண்டில் ஜவுளித்துறை முன்னேற வேண்டும்: ஒன்றிய அமைச்சர் பேச்சு

கோவை: ‘பத்து ஆண்டில் ஜவுளித்துறை முன்னேற வேண்டும்’ என கோவையில் நடந்த ஜவுளித்துறை மாநாட்டில் ஒன்றிய இணை அமைச்சர் பேசினார். கோவை அவினாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் 11வது ஆசிய ஜவுளி மாநாடு மற்றும் சைமா 90-ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் ஒன்றிய ஜவுளித்துறை மற்றும் ரயில்வே துறையின் ஒன்றிய இணை அமைச்சர் தர்ஷணா விக்ரம் ஜர்தோஷ் பங்கேற்று பேசியதாவது: ஜவுளி தொழிலில் உள்ள பிரச்னைகள், சாவல்கள் குறித்து விவாதிக்க இம்மாநாடு நடக்கிறது. இந்தியா பல ஆண்டுகளாக ஆசிய ஜவுளி சந்தையில் முன்னணி வகிக்கிறது.

உலகளவில் இந்திய ஜவுளி உதிரி பாகங்கள் உற்பத்தியில் 2வது இடத்தையும், 2வது அதிக ஸ்பிண்டர்லர்ஸ் உள்ள நாடாகவும் உள்ளது. மேக் இன் இந்தியா மூலமாக ஜவுளி தொழிலில் இந்தியாவை உலக மையமாக மாற்ற பிரதமர் மோடி உறுதியேற்றுள்ளார். ஜவுளித்துறை இந்திய பொருளாதாரத்தில் 8 சதவீதம் ஏற்றுமதி செய்கிறது. 10 கோடி மக்கள் நேரடியாகவும் மறைமுகமாவும் பயன் அடைந்து வருகின்றனர். மூலப்பொருள் விலையில் ஏற்றம் இறக்கங்கள் உள்ளது. இது உலக அளவில் சவால் நிறைந்த சூழலை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு திட்டங்களை வழங்கி ஜவுளித்துறை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் ஜவுளித்துறை முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post 10 ஆண்டில் ஜவுளித்துறை முன்னேற வேண்டும்: ஒன்றிய அமைச்சர் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: