ராகுல்காந்தி தகுதி நீக்கம் கண்டித்து 15ம் தேதி ரயில் மறியல்: காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேட்டி

தண்டையார்பேட்டை: ராகுல் காந்தி எம்பி தகுதி நீக்கம் கண்டித்து தண்டையார்பேட்டை – திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் செய்தியாளர் சந்திப்பு, மாவட்டத் தலைவர் திரவியம் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் பேசும்போது, ஒன்றிய அரசு திட்டமிட்டே ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்தது. இது இந்திய ஜனநாயகத்தின் படுகொலை. அவதூறு என்ற ஒரு சிறிய குற்றத்திற்கு பதவி பறிப்பு என்பது திட்டமிட்டு செய்யப்பட்டது. இது காங்கிரஸையும், ராகுல்காந்தியையும் பழிவாங்கும் செயலாக உள்ளது. அதானி நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி ஊழலைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேச நேரம் கேட்ட ராகுல் காந்தியை பார்த்து பயந்து, அவர் நம் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி விடுவாரோ என்ற பயத்தில் ஒரு சாதாரண பழைய வழக்கை தூசுதட்டி அவரை பழி வாங்கியுள்ளார் பிரதமர்.

உலக பணக்காரர் பட்டியலில் 2017ம் ஆண்டு 609வது இடத்தில் இருந்த அதானி, மோடியின் ஆட்சி காலத்தில் 3வது இடத்திற்கு வந்தது எப்படி?, குலாம் நபி ஆசாத் அரசு குடியிருப்பில் குடியிருக்கிறார். தற்போது அவர் என்ன பதவியில் இருக்கிறார், அவரை வெளியேற்ற அவசரம் காட்டாமல், ராகுல்காந்தியை வெளியேற்றுவதில் என்ன அவசரம், சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் ராகுல்காந்தியின் பதவி பறிப்பு குறித்து தெருமுனைக் கூட்டம் நடத்தப்படும். மேலும் வரும் 15ம் தேதி கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

The post ராகுல்காந்தி தகுதி நீக்கம் கண்டித்து 15ம் தேதி ரயில் மறியல்: காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: