சென்னையில் நாளுக்கு நாள் மாடுகள் மற்றும் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு சென்னை அரும்பாக்கத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசியது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து எழும்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை மாடுகள் முட்டும் நிகழ்வு அதிகரித்தது. மாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க சாலைகளில் மாடுகளை திரிய விடும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.
சமீபத்தில் கூட திருவொற்றியூர் பகுதியில் இரண்டு பேரை எருமை மாடு முட்டியது. இதில் அவர்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், கொரட்டூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சாலையில் கூர்மையான கொம்புகளுடன் மாடுகள் உலா வருவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளன. தனியார் பள்ளிகள், 3 மருத்துவமனைகள், வங்கி என பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.
தற்போது, சாலையில் சுற்றித்திரியும் இந்த மாடுகளால் மக்கள் அஞ்சி நடுங்கி அந்த வழியாக செல்லும் நிலை உள்ளது. இந்த சாலையில் நடமாடும் மாடுகளை, தெரு நாய்கள் விரட்டுவதால், மாடுகள் அலறி ஓடும்போது பொதுமக்களை இடிக்கும் அபாயம் உள்ளது. இந்த தெருநாய்கள் அவ்வப்போது பொதுமக்களையும் விரட்டி கடிக்க வருவதால் பீதியுடன் செல்லும் நிலை உள்ளது. எனவே, பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன், மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் திரியும் தெருநாய்கள் மற்றும் மாடுகளை பிடித்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post அம்பத்தூர் மண்டலத்தில் சாலையில் திரியும் மாடு, தெரு நாய்களால் விபத்து appeared first on Dinakaran.