மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை 15 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மை உத்தரவு

சென்னை: மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி 15 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. புயல் காரணமாக 15 மாவட்டங்களில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நேற்று கலெக்டர்களுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

இதில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் மிக கனமழை, கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து சாலைகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தேங்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும். மழைநீர் வடிகாலில் தண்ணீர் செல்வதை மண்டலம் வாரியாக குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். இந்த குழுக்கள் நேரடி ஆய்வு, சிசிடிவி கேமரா ஆய்வுகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். இடைவிடாமல் மின்சாரம் கொடுக்க வேண்டும்.

மரங்கள் விழுந்த இடங்களில் மின்சாரத்தை தடை செய்து, சீரமைப்பு பணிகளை செய்தவுடன் உடனே மின்சாரம் கொடுக்க வேண்டும். ஆறுகளில் நீர் அளவை கண்காணிக்க வேண்டும். தடுப்பணைகளில் நீர் உள்ள அளவை கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை 15 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: