போலீசாரின் வித்தியாசமான அறிவுரை வந்த இடத்தில ஒழுங்கா குடி.. இல்லாவிட்டால் தர்ம அடி: புதுச்சேரியில் வீடியோ வைரல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மது அருந்த வந்த இடத்தில் நண்பரை பீர் பாட்டிலால் தாக்கியவரை போலீசார் அடித்து இழுத்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஏரிக்கரையோர பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர் 4 நண்பர்களுடன் நேற்றுமுன்தினம் மாலை புதுச்சேரி எல்லையான சேதராப்பட்டில் உள்ள மது கடைக்கு ெசன்று மது அருந்தியுள்ளார். உச்சகட்ட மது போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மணிகண்டன் நண்பர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் 2 பேர் தப்பி ஓடினர். ஒருவர் வசமாக சிக்கவே பீர் பாட்டிலால் அவரது தலையில் அடித்துள்ளார்.

அப்போதும் அந்த நண்பர் அவரை, பிரச்னை ஆகிவிடும் வா என்று அழைத்து செல்கிறார். பின்னர் மணிகண்டன் சட்டையை கழற்றி நண்பரின் தலையில் அமுக்கி அழைத்து செல்கிறார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மது அருந்தி கொண்டிருந்த மற்றவர்களையும், சண்டைக்கு வாடா.. நீ வேணா வந்து பார்றா என அவ்வழியே செல்பவர்களை வடிவேலு பாணியில் அழைத்துள்ளார். ஆபாசமாக திட்டியுள்ளார். தகவல் அறிந்த சேதராபட்டு போலீசார் வந்து, போதையில் ரகளையில் ஈடுபட்ட மணிகண்டனை எச்சரித்தனர்.

அவர், நீங்கள் காக்கி சட்டை அணிந்திருக்கிறீர்கள், எந்த கம்பெனி செக்யூரிட்டி எனக்கூறி போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளிவிட்டுள்ளார். பின்னர் போலீசார் அவரை ‘நன்கு கவனித்து’ காவல் நிலையத்துக்கு இழுத்து செல்லும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகி உள்ளது. காவல் நிலையத்தில் மணிகண்டனிடம், வந்த இடத்தில் ஒழுங்கா குடி, இல்லாவிட்டால் தர்ம அடிதான் என அறிவுரை வழங்கினர். மேலும் பயங்கர ஆயுதங்கள் வைத்து ரகளையில் ஈடுபட்டதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post போலீசாரின் வித்தியாசமான அறிவுரை வந்த இடத்தில ஒழுங்கா குடி.. இல்லாவிட்டால் தர்ம அடி: புதுச்சேரியில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: