தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடக்கம்: மீதமுள்ள இடங்களை நிரப்ப 3 நாட்கள் அவகாசம்

சென்னை: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்குகின்றன. அதேநேரத்தில் கல்லூரிகளில் மீதம் உள்ள இடங்களை நிரப்புவதற்கு கல்லூரி கல்வி இயக்ககம் 3 நாள் கால அவகாசத்தை அளித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு, கலந்தாய்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி உள்ளிட்ட படிப்புகளில் காலியாக இருக்கும் சுமார் 1 லட்சத்து ஆயிரம் இடங்களில், 63 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும், அதாவது 63 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாகவும் கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, பி.காம் படிப்பில் மட்டும் மாணவர்கள் முழுமையாக சேர்ந்துள்ளனர். இந்நிலையில் கல்லூரிகளில் மீதமிருக்கும் இடங்களை நிரப்ப https://www.tngasa.in/ என்ற கல்லூரிகள் சேர்க்கைக்கான இணையதளத்தை இன்றுமுதல் (புதன்கிழமை) மீண்டும் பயன்பாட்டுக்கு திறக்க கல்லூரி கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது. மாணவர்கள் இன்று தொடங்கி நாளை மறுதினம் வரை 3 நாட்களுக்கு இணையதளத்தில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

அதனைத் தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடங்கள் ஒதுக்கப்படும். இதனிடையே கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்றுமுதல் தொடங்க உள்ளது. மேலும் முதலாண்டு வகுப்புகளுக்கு நுழையும் மாணவர்களுக்கு எடுத்த உடனேயே பாடங்களை நடத்தி அச்சமும், மலைப்பும் ஏற்படுத்தாதவாறு, வரும் 10ம் தேதி வரை வழிகாட்டும் பயிற்சி வகுப்புகளை நடத்துமாறு கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இந்த நாட்களில் சமூகத்தின் அனைத்து துறை சாதனையாளர்களை அழைத்து மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சியை உரையாடலாகவோ அல்லது வினா-விடை நிகழ்ச்சியாகவோ நடத்தலாம் எனவும் கல்லூரி கல்வி இயக்ககம் ஆலோசனை வழங்கியுள்ளது.

The post தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று தொடக்கம்: மீதமுள்ள இடங்களை நிரப்ப 3 நாட்கள் அவகாசம் appeared first on Dinakaran.

Related Stories: