பாம்பனில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற படகுகளை மறித்து துப்பாக்கி காட்டி மிரட்டி மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் மீனவர்களின் படகுகளை வழிமறித்த இலங்கை கடற்படையினர், துப்பாக்கி முனையில் விரட்டியடித்தனர். இதனால் குறைந்த மீன்பாடுடன் மீனவர்கள் கரை திரும்பினர்.ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள், மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

மாலை தனுஷ்கோடியில் இருந்து தெற்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், படகுகளை வழிமறித்து துப்பாக்கி முனையில் விரட்டியடித்தனர். அப்பகுதியில் மீன் பிடிக்கக்கூடாது என ஒலிப்பெருக்கியால் எச்சரித்தனர்.மேலும், பாம்பன் மீனவர் இனியன் படகின் அருகே சென்ற கடற்படையினர், மீனவர்களை நோக்கி துப்பாக்கியை காட்டி இனிமேல் இப்பகுதியில் மீன் பிடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்ததுடன் படகில் இருந்த மீன்பிடி வலையை வெட்டி கடலில் வீசினர்.

இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையினால் அச்சமடைந்த மீனவர்கள், மீன் பிடிப்பதை நிறுத்தி விட்டு வேறு பகுதிக்கு சென்று இரவு முழுவதும் மீன் பிடித்து நேற்று பகலில் பாம்பன் வந்து சேர்ந்தனர்.இதனால் கரைக்கு வந்த படகுகளில் மீன்பாடு மிகவும் குறைவாக இருந்தது. மீன் பிடித்து திரும்பிய 15க்கும் மேற்பட்ட படகுகளில் கனவாய் மீன்கள் அதிகளவில் பிடிபட்டிருந்தன. மன்னார் வளைகுடா கடலில் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் மீனவர்களை விரட்டியடித்த சம்பவம் பாம்பன் மீனவர்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

The post பாம்பனில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற படகுகளை மறித்து துப்பாக்கி காட்டி மிரட்டி மீனவர்கள் விரட்டியடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: