விமான நிலைய ஊழியர் கொலையில் போலீஸ் கண்காணிப்பில் இருந்த அர்ச்சகர் ‘எஸ்கேப்’: பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

சென்னை: சென்னை விமான நிலைய ஊழியர் கொலை வழக்கில் தொடர்புடைய கோயில் அர்ச்சகர் வேல்முருகன், போலீசார் கண்ணில் மண்ணை தூவிவிட்டு திடீரென எஸ்கேப் ஆனார். தற்போது போலீசார் கொலையாளி மற்றும் அர்ச்சகரை என 2 பேரை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த ஜெயந்தன் (29) என்பவர் வேலை செய்து வந்தார். அவரை காணவில்லை என்று அவரது சகோதரி ஜெயகிருபா பழவந்தாங்கல் போலீசில் புகார் அளித்தார்.

இதையொட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஜெயந்தன் புதுக்கோட்டை செம்மாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளதும், பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்ததும் தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில், பாக்கியலட்சுமி, அவரது நண்பர் சங்கருடன் சேர்ந்து ஜெயந்தனை கொலை செய்து கோவளம் கடற்கரையில் புதைத்ததுள்ளனர். இந்நிலையில் ஜெயந்தனின் உடல்பாகங்களை புதைக்க உதவிய கோவளம் பூமிநாத சுவாமி கோயில் அர்ச்சகர் வேல்முருகனை பிடித்து, பழவந்தாங்கல் மற்றும் பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், அர்ச்சகரை கண்காணிக்க தனியாக போலீசாரை நியமித்து இருந்தனர். அவர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு அர்ச்சகர் எஸ்கேப் ஆகிவிட்டார். இந்நிலையில் மடிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், நேற்று ஜெயந்தனின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தை தேடி பழவந்தாங்கல், மடிப்பாக்கம், கோவளம் போலீசார் உடல் புதைக்கப்பட்ட இடமான கோவளத்துக்கு வந்தனர். அப்போதுதான் அர்ச்சகர் தலைமறைவான விஷயமே மூன்று காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு தெரியவந்தது. அர்ச்சகர் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தது. இதனால், போலீசாரால் சடலம் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், தலைமறைவாகி உள்ள அர்ச்சகர் வேல்முருகனை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

The post விமான நிலைய ஊழியர் கொலையில் போலீஸ் கண்காணிப்பில் இருந்த அர்ச்சகர் ‘எஸ்கேப்’: பிடிக்க 2 தனிப்படை அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: