கோவை, நவ.30: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சூர்யா (27). ஓட்டல் தொழிலாளி. இவர் மனைவி ஜெனிதா மேரி (23). இவர்களுக்கு 4 வயது மகள், 2 வயது மகன் உள்ளனர். சூர்யா கடந்த சில மாதங்களாக கோவை கருமத்தம்பட்டியில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன் தினம் திருநெல்வேலி செல்வதற்காக மனைவி,குழந்தைகளுடன் சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் வந்தார். குடும்பத்தினரை பஸ்சில் உட்கார வைத்த பின்னர் கடைக்கு சென்று வருவதாக கூறிய சூர்யா வெளியே சென்றார். பின்னர் அவர் வரவில்லை. அவரது குடும்பத்தினர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் தேடினர். அவர் கிடைக்கவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. கணவர் தவிக்க விட்டு சென்றதால் ஜெனிதா மேரி குழந்தைகளுடன் கதறி அழுதார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மாயமான சூர்யாவை தேடி வருகின்றனர்.