ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்: வலி நிவாரண மருந்துகளை போதை பொருள் ஆக்காதீர்கள்

கோவை, ஏப். 28: கோவை மாவட்ட மருந்து வணிகர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவை காந்திபுரம் சத்தி ரோடு ஜி.பி. கிராண்ட் கேலக்ஸி மஹாலில் நேற்று நடந்தது. மாநில தலைவர் கே.மனோகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கே.கே.செல்வன், கோவை மாவட்ட தலைவர் பி.பி.செல்வம், செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் ரமேஷ் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.

இதில், ‘’புற்றுநோய்க்கான மருந்து உள்ளிட்ட பல்வேறு உயிர் காக்கும் மருந்துகள், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒரே மூலக்கூறுகள் அடங்கிய மருந்து பொருட்கள் ஒரே விலையில் கிடைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மருந்து பொருட்களும் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.’’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுபற்றி மாநில தலைவர் மனோகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘’வலி நிவாரண மருந்துகளை, இளைஞர்கள் மற்றும் போதை ஆசாமிகள், போதை பொருளாக பயன்படுத்தி வருகிறார்கள். இதை ஒன்றிய அரசும், மாநில அரசும் முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். மருத்துவர் ஒப்புகை சீட்டு இல்லாமல், வலி நிவாரண மருந்துகளை விநியோகம் செய்யக்கூடாது.

இதனை இளைஞர்கள் தவறான முறையில் பயன்படுத்தாமல் இருக்க மாநில அரசு கட்டுப்படுத்த வேண்டும். காலாவதியான மருந்துகளை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். கூட்டத்தில், கோவை மாவட்ட மொத்த மருந்து வணிகர் சங்க தலைவர் ரத்தினம், கோவை மாவட்ட சில்லரை மருந்து விற்பனையாளர் சங்க தலைவர் மலையப்பன், கோவை மாநகராட்சி மாமன்ற எதிர்கட்சி தலைவர் அழகு ஜெயபாலன், நிர்வாகிகள் சந்திரன், செந்தில்செல்வம், மகேந்திரன், துரைசாமி, சந்திரன், சிவக்குமார், அருணகிரி, ெஜயக்குமார், ராஜேந்திரன், ரத்தினம், மலையப்பன், முருகேசன், ஆறுமுகம், குப்புசாமி, கார்த்திகேயன், விஸ்வநாதன் உள்பட பலரும் பேசினர்.

The post ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்: வலி நிவாரண மருந்துகளை போதை பொருள் ஆக்காதீர்கள் appeared first on Dinakaran.

Related Stories: