வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர்களை போலீசார் தடுத்ததால் திடீர் சாலை மறியல் சுடுகாட்டுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை

வேலூர், நவ.24: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர்களை போலீசார் தடுத்ததால் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் அடுத்த இடையன்சாத்து இந்திரா நகர் பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கடந்த 70 ஆண்டுகளாக சுடுகாட்டுக்கு சாலை வசதியின்றி அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அனைவரும் கும்பலாக வந்ததால் அவர்களை சர்வீஸ் சாலை எதிரே இன்ஸ்பெக்டர் புனிதா தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர், பின்னர், மனு அளிக்க 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும்.

கூட்டமாக செல்லக்கூடாது என அறிவுறுத்தினர். அதற்கு பொதுமக்கள், சுடுகாடு பாதையின்றி பல ஆண்டுகளாக போராடுகிறோம். அடிப்படை பிரச்னையை தீர்க்க வந்தால் கூட்டத்தை காரணம் காட்டி அனுமதிக்க மறுப்பதா? எங்களை கைது ெசய்து கொள்ளுங்கள்’ என ஆவேசமாக கூறி தடையை மீறி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.  அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் அவர்கள் சர்வீஸ் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் ெசய்து கலெக்டர் நுழைவாயில் வரை அனுமதித்தனர். அங்கிருந்து 5 பேர் மட்டுமே மனுஅளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: