மாமல்லபுரம், அக். 16: மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதை தடுக்க வந்த போலீஸ்காரருக்கு பளார் என அறை விழுந்தது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சென்னைக்கு அருகே உள்ள ஏகாட்டூரை சேர்ந்தவர் டாக்டர் காந்த் (29). திருப்போரூர் அடுத்த அம்மாபேட்டையில் உள்ள சத்ய சாய் கல்லூரியில் எம்டி படிக்கிறார். இவரது மனைவி நிலோஷா (29). டாக்டர். தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் மெடிக்கல் ஆபிசராக வேலை பார்க்கிறார். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.காந்த் படிக்கும் அதே கல்லூரியில் குன்றத்தூரை சேர்ந்த வைஷாலி என்ற பெண்ணும் படிக்கிறார். அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் அது காதலாக மாறியது. இதுபற்றி நிலோஷாவுக்கு தெரியவந்தது. இதனால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில், காந்த் வீட்டிலிருந்து வெளியே சென்று தங்குவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிலோஷா, மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசில், காந்த் மற்றும் வைஷாலி மீது ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.