குன்றத்தூர் முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை: திரளான பெண்கள் வழிபாடு

 

குன்றத்தூர்,ஏப்.29: குன்றத்தூர் முருகன் கோயிலில் நடைபெற்ற 508 திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்படும். அதன்படி, இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா நேற்று நடந்தது. சித்திரை திருநாளை முன்னிட்டு கோயில் வளாகத்தில் 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில், குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வள்ளி தெய்வானையுடன் காட்சியளித்த முருகனுக்கு முன்பு வரிசையாக அமர்ந்து திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். அப்போது, பெண்கள் குத்து விளக்கில் தீபம் ஏற்றி முருகனை வழிபட்டனர்.

இதையடுத்து பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் இலவசமாக புடவைகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதையடுத்து கோயில் வளாகம் முழுவதும் திருவிளக்கு தீபங்கள் ஏற்றப்பட்டு ஒளிமயமாக காட்சியளித்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரை கண்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மேற்கொண்டனர்

The post குன்றத்தூர் முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை: திரளான பெண்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: