காஞ்சிபுரம் அண்ணா நினைவு பூங்கா சீரமைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்காவில், புதர் மண்டி பாம்புகள் தொல்லை அதிகரித்துள்ளதால் பூங்காவுக்கு செல்லும் சிறுவர்கள், பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர் என்ற தினகரன் செய்தி எதிரொலியாக நேற்று மாநகராட்சி ஊழியர்கள் பூங்காவில் உள்ள புதர்களை அகற்றி சீரமைத்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார்பாளையம் பகுதியில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா உள்ளது. காஞ்சிபுரத்தில் கோயில்களை தவிர, பொழுதுபோக்கு அம்சங்கள் வேறு எதுவும் இல்லாததால், இந்த பூங்காவிற்கு காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வரத்தொடங்கினர். இந்நிலையில், பூங்கா முறையாக பராமரிக்கப்படாததால் புதர்மண்டி விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும், மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால், பூங்காவிற்கு சிறுவர்களை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் தயக்கம் காட்டினர். எனவே, இதுகுறித்து நமது தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து உடனடியாக ஆணையர் செந்தில் முருகன் தலைமயிலான மாநகராட்சி அலுவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் பூங்காவில் உள்ள புதர்களை அகற்றி சீரமைத்தனர். மேலும், பூங்காவை தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்க மாநகராட்சி பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி, பராமரிப்பு பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தினகரன் செய்தி எதிரொலியாக உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

The post காஞ்சிபுரம் அண்ணா நினைவு பூங்கா சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: