கோவை, அக். 16: ஊரடங்கிற்கு பின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகள் சேவை நேற்று முதல் துவங்கியுள்ளது. இந்நிலையில் கோவையில் இருந்து ஆம்னி பேருந்துகளின் சேவை இன்று முதல் துவங்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கோவை சக்தி சாலையில் 100 அடி ரோடு அருகே ஆம்னி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. சுமார் 350க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கோவையில் இருந்து சென்னை, திருநெல்வேலி, நகர்கோவில், தென்காசி, பெங்களூர், ராஜபாளையம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் ஆம்னி பேருந்துகளின் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.