பொள்ளாச்சி, மார்ச் 19: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி உள்ளிட்ட வனச்சரகத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்ததால், பசுமை குறைந்து பெரும்பாலான இடங்களில் மரங்கள் காய்ந்து போயின. டாப்சிலிப் மற்றும் வால்பாறை பகுதிக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை இருந்துள்ளது. இந்நிலையில் டாப்சிலிப் மற்றும் வால்பாறைகளுக்கு, வெளி மாநில மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் வருகை இருந்ததாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பீதியுள்ள இந்நேரத்தில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சுற்றுலா பகுதிகளுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கக்கூடாது என இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப், வால்பாறை, மானாம் பள்ளி உள்ளிட்ட பல சுற்றுலா பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. மேலும், வனத்துறை மற்றும் தனியார் மூலம் நடத்தப்படும் விடுதிகளுக்கான முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 31ம் தேதி வரை தொடர்ந்திருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் வால்பாறைக்கு செல்லும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை வனத்துறையினர் ஏற்படுத்தி வருகின்றனர். வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வால்பாறை-பொள்ளாச்சிக்கும், பொள்ளாச்சி-வால்பாறைக்கும் செல்லும் பஸ், வேன், கார்களில் பயணிப்பவர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு செல்லும் வாகனங்களில் கிருமி நாசினியும் தெளிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.