கடலூர், மார்ச் 18: கடலூர் முதுநகரில் மேற்கொள்ளப்பட்டுவரும் துறைமுக பணியை விரைந்து முடித்திட உணவுப்பொருள் வியாபாரிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.கடலூரில் உணவுப்பொருள் வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்லபாண்டியன் முன்னிலை வகித்தார் . பொருளாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயபிரகாசம், செயலாளர் வேல் சங்கர், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நகர தலைவர் ஜி. ஆர் துரைராஜ், செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு உணவு பாதுகாப்பு சட்டம் குறித்தும் சில்லரை வணிகர்கள் பொருட்களை கொள்முதல் செய்வது குறித்தும் விளக்கி பேசினர்.