கோவை, பிப்.26: கோவை வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி பகுதி கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர்கள் தளபதி இளங்கோ, கோட்டை அப்பாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை அமைப்பாளர்கள் திருமலைராஜா, கேபிள் மணி, செந்தமிழ்செல்வன், சோமு என்ற சந்தோஷ், கோவை ராஜா, பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். இதில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை வரும் மார்ச் மாதம் முழுவதும் கொண்டாட வேண்டும். வரும் மார்ச் 5ம் தேதி கோவை வருகை தரும் திமுக இளைஞர் அணி செயலளர் உதயநிதிஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிரிக்கெட் லீக் போட்டியை மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடத்த வேண்டும்.