சென்னை, பிப்.21: சிட்லபாக்கம் ஏரியில் குப்பை கொட்ட தடை உள்ளது. எனவே பஞ்சாயத்து நிர்வாகம் ஏரிக்கு அருகில் உள்ள இடுகாட்டில் குப்பை கொட்டி தீ வைப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதுகுறித்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அமர்வில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா முன்பு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இடுகாடுகள் முறையாக பராமரித்து பல்லுயிர் பூங்கா அமைக்கப்படுகிறது. இத்திட்டம் முடிவடையாமல், இடுகாடு குப்பை கொட்டும் கிடங்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும், குப்பையை எரித்து காற்று மாசு ஏற்படுத்துகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியமாக செயல்படுவதையே காட்டுகிறது.